சனி, 24 பிப்ரவரி, 2018

என்னைப்பற்றி மீண்டும் ஒருமுறை...

என்னைப்பற்றி மீண்டும் ஒருமுறை...


"வலையுலக சொந்தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்..."


"என்னைப்பற்றி இதுவரை யாரிடமும் நான் சொன்னதில்லை,"

"ஆனால்...
                இங்கு என்னைத் தொடரும் சொந்தங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்..."


Ajai Sunilkar Joseph

"எனது பெயர் அஜய் சுனில்கர்
"கன்னியாகுமரி" மாவட்டத்தில்"தேங்காய்பட்டணம்" என்ற ஊரின் பக்கத்தில் "தொழிக்கோடு" என்ற ஊரில் சாதாரண பிறப்புதான்,

"கண்டிப்பான குடும்பம்,அழகான வாழ்க்கை 
அன்பான அப்பா , அம்மா, அண்ணன், அக்கா, கடைசியாக நான் !"

"எவ்வளவுதான் கண்டிப்புடன் என்னை வளர்த்திருந்தாலும் எனது "பள்ளிக்கூட வாழ்க்கை" 7- ஆம் வகுப்புவரைதான் பயணித்தது,"

காரணம்...

"படிப்பு என்றாலே மண்டையில் ஏறாது,
பள்ளிக்கூட தேர்வுகளில்"35"தான் வெற்றி மதிப்பெண் என்றால் அந்த மதிப்பெண்கள் கூட கிடைக்காது"

"ஒரு தேர்வில் அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து 98 மதிப்பெண்கள் வாங்கினேன் என்றால் நான் எப்படி படித்திருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்"



"படிப்பில் நாட்டம் இல்லாததால் பள்ளிக்கூடம் போகாமல் கட் அடித்தேன் !
பள்ளிக்கூடத்தில் இருந்து ஆள் அனுப்பி வீட்டில் அறிவித்தார்கள் !"



"அப்பா அடிப்பார் என்று ஓடினேன் வீட்டை விட்டு எங்கேயாவது போக வேண்டும் என்று..."

"ஆனால்...
                  வீட்டில் எவ்வளவுதான் கண்டிப்பு இருந்தாலும் அந்த அன்பான வாழ்க்கையை விட்டுப் போக மனம் அனுமதிக்கவில்லை,"

"அன்று மதியமே வீட்டில் போனேன்,வந்ததும் அப்பா அடிக்கவில்லை,பள்ளிக்கூடம் போகிறாயா,வேலைக்கு போகிறாயா என்று கேட்டார்,படிப்பில் வேறு நமக்கு வெறுப்பு அதனால் வேலைக்கு போறேன் என்றேன்"

"அப்போது '2006' ஆம் ஆண்டு ஒரு தையல் கடையில் என்னை தையல் கற்க ஏற்பாடு செய்திருந்தார் அப்பா"

"அந்த நேரம்தான் சிறுவர் தொழிலாளர்களை தேடி கண்டு பிடித்து படிக்க வைத்து வந்தார்கள்."


"ஆனால் நான் இருந்த பகுதியில் அப்படி யாரும் என்னை தேடி வரவில்லை"

"2006 முதல் 2009 வரை அங்கு இருந்தேன்"

"வெறும் சட்டை மட்டும் தைக்க கற்றுக் கொடுத்தார்கள்,பிறகு அங்கு பிடிக்காததால்
அங்கிருந்த எனது தையல் மெஷினை எடுத்து
விட்டு கிளம்பினேன்"

"வரும்போது முதலாளி 'நல்ல ஆசீர்வாதம்' வழங்கி அனுப்பினார்,என்ன ஆசீர்வாதம் என்று தெரியுமா...?"

"அவரிடம் வேலை படிக்காமல் வேறு எங்கே போனாலும் 'நான் உருப்படவே மாட்டேன்' என்பதே,"


"நெஞ்சில் 'கொள்ளிக்கட்டையால் சுட்டதுபோல்' வடு இன்னும் மாறவில்லை,பிறகு பக்கத்து ஊரில் அப்பாவின் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்த கடைக்கு போனேன்,


"அங்கு பேண்ட, சட்டை தைக்க கற்றுத்தந்தார்கள்,
ஆனால் அங்கு எப்போதும் முதலாளி கடையில் இருப்பதில்லை,"அதனால் அங்கும் நிலைக்கவில்லை,"

"பிறகு சொந்த ஊரில் ஒரு கடையில் 2 வருடங்கள் தைத்து,பிறகு பேண்ட், சட்டை வெட்டித் தைக்க கற்றும் தந்தார்,தைரியமும் தந்தார்."


"அந்த கடையில் கொஞ்ச நாட்கள் வேலை செய்து விட்டு முதலாளியின் அனுமதியுடன் திருநெல்வேலியில் 'பத்தமடை'என்ற ஊரில் எனது பெரியப்பாவின் கடையில் பெண்கள் ஆடைகள் தைத்து படிக்க போனேன்."

"அங்குள்ள 'இயற்கை' எனக்கு ஒத்து வராததால் அங்குஒரு மாதமும் நிலைக்கவில்லை,பிறகு சொந்த ஊரிலேயே வேறு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தேன்."

"அங்கு 2 வாரங்கள் வேலை செய்தேன்,மூன்றாவது வாரம் வேலை செய்து விட்டு,மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18- ம் தேதி"

"ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாமல் ஊர் சுற்றுவது நண்பர்களின் வழக்கமான ஒன்று,அன்றும் வழக்கமாக ஊர் சுற்றி விட்டு வரும்போது..."

"என் பின்னால் இரண்டு நண்பர்களை அமர வைத்து என் அண்ணனின் பைக்கில் வந்து கொண்டிருந்தேன்,"

"ஒரு வளைவான ரோட்டில் அரசுப்பேருந்து விரைவாக வந்து கொண்டிருந்தது,
ஒலிப்பெருக்கி அப்பேருந்தில் இல்லை போல..."


"கண் இமைக்கும் நேரத்தில் என் வாழ்க்கை திசைமாறி பயணித்தது,ஆமாம் எனது உயிர் ஒரு நொடி பிரிந்து சேர்ந்தது,விபத்து ஒன்றில் !"

"பேருந்து மோதிய வேகத்தில் என் பின்னால் இருந்த நண்பர்கள் தூக்கி வீசப்பட்டனர்"

"நான் எனது கால் முறிக்கப்பட்டு நான் சென்ற வாகனத்தில் அதிசயமாக விழாமல் அமர்ந்தே இருந்தேன்."

"நல்ல வேளையாக எனது நண்பர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்துக் கொண்டனர்,
எனது வலியும் விபத்து பயமும் என் மூளையில் நேரடியாய் தாக்க,அம்மா என்று கத்தியதே பக்கத்து ஊரில் உள்ளவர்களை சம்பவ இடத்தில் வர வைத்தது."


"நான் மெதுவாய் சாயத்துவங்க பக்கத்தில் நின்ற 'ஒரு மனிதர்' என்னை விழாமல் தாங்கி பிடித்தார்"

"வலது கால் முறிந்து இடது பக்கமாக வண்டியுடன் சாய அந்த மனிதர் என்னை பிடித்ததனால் என் இடது கால் முறிவில் இருந்து தப்பியது,"


"என் அம்மாவுக்கு இந்த சேதி அறிவிக்கப்பட்டு என் அம்மா, அக்கா, பாட்டி ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே வந்து அழுதனர்"
(நான் இறந்தால் எப்படி அழுவார்கள் என அப்போது புரிந்தது)

"நான் ரோட்டில் பிணம் போல் கிடந்ததைப் பார்த்து 108 க்கு தகவல் கொடுத்தனர் அந்த ஊர் மக்கள்"

"4 மணிக்கு விபத்து நடந்தது ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து 1½மணிநேரம் கழித்தே வந்தது."


"அருகே உள்ள மருத்துவ மனையில் என்னை அனுமதித்தனர்,அறுவைசிகிட்சையில் காலில் ப்ளேட் வைத்தார்கள்."

"கொஞ்ச நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி"Walker" உதவியுடன் நடந்து,பிறகு "Stick"  உதவியுடன் நடந்தேன்."

"பிறகு ஒரு வருடம் ஆகும் முன்னால்முன்னால் கால் இடறி விழுந்து மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை செய்தனர்."

"மீண்டும் ஒரு வருடத்துக்கு பின்னர் நடக்கும்போது கால் வளைவு ஏற்பட்டதால் மூன்றாவதாக அறுவைசிகிட்சை செய்யப்பட்டது."


"விபத்தின் மூலம் கால் 1¼ அங்குலம் உயரம் குறைந்ததால் சற்று சாய்ந்தவாறே என்னால் நடக்க முடிகிறது,உயரத்தை அதிகப்படுத்த மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை செய்ய வேண்டும்."

"விபத்துக்கு பின் கிடைத்த ஓய்வுநாட்களில் எனது முதல் முதலாளியின் ஆசீர்வாதத்தை முறியடிக்க அந்த இறைவன் அருள் புரிந்தார்,அவருக்குத் தெரியாத வேலைகளை கூட கற்றுக்கொண்டேன்."


இனி இந்த தளத்தை எப்படி உருவாக்கினேன்
என்பதை கொஞ்சம் சொல்கிறேன்.


"எனது விபத்துக்கு பின் பொழுதே போகாமல் வெளியே பறந்து திரிந்த நான் ஒரு கூண்டில் அடைபட்ட பறவையாகதான் இருந்தேன்,
அந்த நேரம்தான் 2013 ல் டிசம்பர் மாதம் சமூக வலைத்தளமாகிய முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கினேன்"

"அங்கே நண்பர்கள் பதிவின் மூலம் கவிதைகள் கொஞ்சம் கொஞ்சம்  வாசிப்பேன்,பிறகு கூகுளில் காதல் கவிதைகள் தேடிப்பார்த்து படித்து வந்தேன்."

"அங்கே எனக்கு அறிமுகமானது தமிழ்கவிதைகள் என்று A.P.தினேஷ் குமாரின் தளம்."


"அங்கே நிறைய கவிதைகள் படித்து அந்தத் தளத்திலே நான் முதல் முதலாய் ஒரு கவிதை என்ற பெயரில் ஒரு கிறுக்கலை அனுப்பி வைத்தேன்"

"அந்தக்கவிதையை அவர் தளத்திலே அதை வெளியிட்டார்."
நான் கிறுக்கிய முதல் கிறுக்கல்
"அதன் பிறகு ஏன் நாமே கவிதைகள் எழுத கூடாது என்று நினைத்தேன்,கற்பனை கவிதைகள் என்று பல கிறுக்கல்களை கிறுக்கி முகநூலிலே நண்பர்களிடம் பகிர்ந்து கருத்துகளும் விருப்பங்களும் வாங்கினேன்"

"அங்கே நான் எழுதிய கிறுக்கல்களை Copy ,Paste செய்து வேறு நண்பர்கள் பகிர்ந்தனர்"

"அது எனக்கு பிடிக்கவில்லை"

"அதனால் A.P.தினேஷ் குமார் மாதிரி ஒரு தளம் அமைத்து கவிதைகளை பகிரலாம் என்று நினைத்தேன்,"

"ஆனால் அப்போது என்னிடம் இருந்தது நோக்கியா C2 என்ற மாடல் கைப்பேசிதான்"

"பிறகு 2014 செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு ஆன்ட்ரைடு கைப்பேசி வாங்கித்தந்தாங்க,அதன் மூலம் புகைப்படத்தில் கவிதைகள் கிறுக்கி முகநூலில் தான் பகிர்ந்தேன்"

"பிறகுதான் 2015 ல் நவம்பர் மாதம் A.P.திதினேஷ்குமார் நண்பரின் தளத்திற்கு சென்றேன்,


அங்கே நான் கிறுக்கிய கவிதைக்கு நண்பர் திண்டுக்கல் தனபாலன் கருத்துரை தெரிவித்திருந்ததை பார்த்தேன்."





"அப்போதுதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன் தளத்தின் பதிவுகளை கொஞ்சம் படித்தேன்,எனது கைப்பேசியின் திரை முழுவதும் எனது கண்கள் மேய்ந்தது,எங்கேயாவது Create Blog இருக்கிறதா என்று..."



"கைப்பேசி திரையின் ஒரு மூலையில் இருந்தது Create Blog என்று இருந்தது,Ajai Sunilkar Joseph Kavithaigal என்று துவங்கினேன்,பிறகு பெயர் மாற்றம் செய்தேன்,கரையோரம் சிதறிய கவிதைகள் என்று."



"அப்போதுதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன்தனது தளத்தில் கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...
என்ற பதிவில் அருமை நண்பர் கில்லர்ஜி யைசொல்லி இருந்தார்..."


"அந்த நேரம்தான் நண்பர் கில்லர்ஜி யின் பதிவுகள்கொஞ்சம் படித்தேன்,அவரது பதிவுகளில் சில என்னுடன் பேசுவதும் உணர்ந்தேன்,அப்போது எனக்கு கருத்துரை இடத் தெரியாமல் கருத்துரை இட்டதுக்கு மேல் இடுவேன்,"


"நண்பர் கில்லர்ஜி யை தொடர்ந்தேன் அவரது பதிவுகளுக்கு தொடர்ந்து வருவேன் எனக்கு தெரிந்தது போலவே கருத்துரை இடுவேன்,

நண்பர் கில்லர்ஜி அவரது பதிவை தொட்டவர்களையே விடமாட்டார்,அவரை தொடர்ந்தால் விடுவாரா...!"

"என்னையும் தொடர்ந்தார்..."

"அருமை நண்பர் கில்லர்ஜி அவரது தளத்தில் பத்து முத்துக்களில் என்னையும் ஒருவனாக அறிமுகம் செய்தார்,இதோ பதிவின் இணைப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துவீரே..."

"நண்பர் கில்லர்ஜி அறிமுகம் செய்ததால் இந்தத்தளம் உங்கள் பார்வையில்
சீக்கிரம் கிடைத்து விட்டது,அன்பு நண்பர் கில்லர்ஜி க்கு என் மனமார்ந்த நன்றிகள்  தெரிவித்துக் கொள்கிறேன்.


"இப்போது...
                      
வெண்மதி Tailors 
O/o Ajai Sunilkar Joseph"






"அன்பான வலையுலக சொந்தங்களை இந்த பதிவில் சந்திப்பதில் பிரியமில்லாதவனுக்கு சந்தோஷம்தான்...

ஆனால்.....
                  என்னவோ வலையுலகை விட்டு ரொம்ப தூரமாக போனதாக உணர்கிறேன்,அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்."ஏற்கனவே ஒரு பதிவில்"என்னை பற்றி கொஞ்சம்சொல்லி இருக்கிறேன்."

"அதில் சொன்னபடி எல்லாம் வல்ல இறைவன் அருளால் தையல் வேலையை ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்,"

"6-7-2016 ம் தேதி என் வாழ்க்கையில் நான் உழைத்து பிழைக்கவே இந்த வெண்மதி எனக்காக உதித்தாள்,நான் இந்த வெண்மதிக்கு முதலாளி ஆகி விட்ட காரணம்தான் வலையுலகை விட்டு ரொம்ப தூரம்போன காரணம் கூட."


"அம்மா,அப்பா ஆசியுடன் தையல் கடையை ஆரம்பித்தேன் இறைவன் அருளால் அருமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது,


கடைக்கு தமிழ் பெயர்தான் வேண்டும் என்பதால், இந்த வெண்மதியை உதிக்க வைத்தேன்."


"இந்தப்பதிவுக்கு இப்போதாவது நேரம் கிடைத்தது என்பதுதான் சந்தோஷம்,

மன்னிக்கவும் சொந்தமாக நான்தொழில் துவங்கிய காரணத்தால் உங்கள்தளங்களுக்கு என்னால் வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்...
நான் உழைத்துப்பிழைக்க இந்த வெண்மதி உதித்தது மட்டும்தான் சந்தோஷம்,"

"இதோ என் வாழ்க்கையில் எனக்காக உதித்த வெண்மதி"



"(அன்பு நண்பர் Killergee என்னை காணவில்லை என்று ரொம்ப தேடினார் அவருக்காகவே இந்தப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)"


(இது ஒரு மீள்பதிவு)

8 கருத்துகள்:

  1. உங்களை பற்றி படித்தேன் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.... கூகுள் பளஸ் மூலம் உங்களை அறிந்த்தேன்... நீங்கள் கவிதைகளாக எழுதுவதால் அப்ப அப்ப வந்து படிப்பேன்..... எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம் அதனால்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே, உங்கள் வருகைக்கும்
      வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல...!

      நீக்கு
  2. தங்களது நிலைப்பாடு நான் ஏற்கனவே அறிந்ததே...

    தங்களது விடாமுயற்சி தொடரட்டும் வாழ்க வளமுடன்.

    என்னையும் நினைவில் நிறுத்தியமை கண்டு மகிழ்ச்சி, நன்றி.

    அவ்வப்போதாவது பதிவுலகம் வந்து செல்வது உங்களுக்கும் நல்லது இல்லையெனில் பிறரும் மறக்க கூடும்.

    நேரமில்லை என்பது ஏற்பதற்கில்லை வாரத்தில் அரை மணிநேரம் போதுமே...

    வெண்மதி வானில் சுடர் விடட்டும் ஒளியாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ...!
      நிச்சயமாக பதிவுலகம் வருவேன்...

      நீக்கு
  3. வருக நண்பரே... உங்கள் தளத்தில் அவ்வப்போது படித்துப் பின்னூட்டமிட்டிருக்கிறேன். ஒருமுறை சோகம், காதல் தவிர வேறு கவிதைகள் எழுதச் சொல்லியும் கேட்டிருந்த நினைவு. உங்கள் கதை மனதில் நின்று விட்டது. உங்கள் விடா முயற்சி உங்களை எழுந்து நிற்க வைத்துள்ளது. மென்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துகள். தொடருங்கள். தொடர்வதை ப்ளஸ் உள்ளிட்ட தளங்களில் பகிருங்கள். அப்போதுதான் நண்பர்களுக்குத் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கு நன்றிகள் பல,
      காதல் கவிதைகள் மட்டுமே பழகிய எனக்கு
      வேறு கவிதைகள் வரவில்லை இருந்தாலும்
      முயல்கிறேன்,
      அடுத்த பதிவு நிச்சயம் உங்கள் கருத்துரைக்காக தான்,
      வாழ்த்தியமைக்கு நன்றிகள் சொல்லி மாளாது
      இருந்தாலும் நன்றிகளை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்...

      நீக்கு
  4. பூட்டேற்றி என்று ஒரு ஊரா? கேள்விப்பட்டதில்லை? எங்கு இருக்கிறது? பத்தமடை என் பாஸ் பிறந்த ஊர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து சுமார்
      முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நண்பரே..
      ஒரு முறை வருகை தாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!