சனி, 4 ஆகஸ்ட், 2018

தாயகம் திரும்பிய பறவை...

தாயகம் திரும்பிய பறவை...


அன்பான இணைய சொந்தங்களுக்கு
அஜய் ன் அன்பான வணக்கங்கள்...

நான் எழுதும் கவிதைகளுக்கு பின்னணிப் படங்களை  
கவிதையை எழுதிய பின்னர் நானே படங்களை எடிட் 
செய்து அதன் மேலேதான் கவிதைகளை டைப் செய்வது வழக்கம்.

ஆனால் இன்று போட்டோஷாப் இல் மனமும் , கைகளும் 
போன போக்கில் ஒரு படத்தை எடிட் செய்தேன்,ஆனால் 
அதற்கான வரிகளை எவ்வளவோ சிந்தித்தும் புலப்படவில்லை,
வெறும் நால்சுவர் அறையில் தரையை வனாந்தரமாகவும்,
அதில் நானே நின்று சுவரில் மாட்டப்பட்ட ஒரு வயல்வெளிப்
படத்தையும், அதன் மேலே ஏசி யையும் பார்க்கிறேன்...
வெறும் கற்பனையாகவே இந்தப்படத்தில் வாழ்ந்துள்ளேன்,
இந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் இருந்தால் எப்படி வலித்திருக்கும்!
எனக்குத் தோன்றிய வரிகளை கீழே எழுதியுள்ளேன்,தவறுகள்
இருந்தால் தயவாய் மன்னிக்கவும் நண்பர்களே...!
(ஆனால் அந்தப்படத்தைப் பார்த்தால் ஏதோ மனம் வருந்துகிறது)
(படத்தை கீழே கொடுத்துள்ளேன்)

உங்களுக்கு ஏதாவது புலப்பட்டால் பின்னூட்டங்களில் 
தாருங்கள் அன்பர்களே...!



"இறக்கை அடித்தே அழகிய நாளை
நினைத்து வந்தேன்,

வேர்வை வழியே உதிரம் சொட்டி,
கற்றை பணத்தைக் கையில் எடுத்து,

எத்தனை காலம் ஏங்கி நின்றேன்
இல்லம் ஒன்றை வடிவமைக்க,

உற்றார் ஒன்றாய்,ஊரார் ஒன்றாய்,
வார்த்தைகள் அள்ளி வாழ்க்கையில் வீசி,

கட்டிய வீடு அழகாய்த் தெரிய,
ஆனந்தம் கொண்டேன் ஆழ்மனதில்,

வீடும் எனதாய்,வாழ்க்கையும் எனதாய்,
மனையில் வாழ மனைவியை தேடி,

அலைந்த தூரம் கொஞ்சமில்லை,
அழகாய் ஒருத்தி,அன்பாய் ஒருத்தி,

இரண்டும் ஒன்றாய் கிடைத்திட தவித்தேன்,
வருங்கால மனைவியாய் அவள் வந்தாள்,

நினைக்கும் நேரம் காணொளிப் பேசி,
கனிந்தே வந்தன வார்த்தைகள் கோடி,

மங்கை கழுத்தில் மாலைத் தொடுக்கும்
நாளும் நெருங்க , மணந்தும் கொண்டேன்,

நினைத்த நேரம்,நினைத்த வாழ்க்கை,
கொடுத்து வைத்த வாழ்க்கையாம் எனக்கு...!

ஹ்ஹ்ம்ம்....

வாழ்த்திய நெஞ்சங்கள் பலருக்கும் நன்றிகள்
சொல்லி வழியனுப்பி விட்டேனேத் தவிர,

அலாதி அன்பை இழந்த துக்கம்
மட்டும் என்னை விடாமல் துரத்த,

அயலகம் சென்றேன் உழைப்பதற்காக,
தாயகம் வந்தேன் பிழைப்பதற்காய்,

வாயடைத்துப் போய்,வருந்தி நின்றேன்,
என் பசுமை நிலத்தைப் படமாய் பார்த்து...!

காற்றையும் எனது கற்றைப்பணத்தில்
அறையில் அடைத்து விட்டேன்,

என் தந்தையின் விவசாய நிலம் எங்கே...?
அது படமாகத் தொங்குது இங்கே...!

தாயகம் திரும்பிய பறவைக்கு
அமர்ந்திளைப்பாற ஓர் பூவனம் இல்லை,

சோலையெல்லாம் சாலையாய்,
நான் வாழ்ந்த பூமியே பாலையாய,

காண்கிறேன் கண் முன்னே
உயிருடன் சாகிறேன் இங்கே...!"

Ajai Sunilkar Joseph 



By...

16 கருத்துகள்:

  1. கவிதை வரிகளும், புகைப்படத்தின் அவலமும் மனதை கனக்க வைத்தது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இந்த புகைப்படக் காட்சியை மறக்க முடியவில்லை நண்பரே..

      நீக்கு
  2. படத்தையும் ரசித்தேன், கவிதையையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. படம் தந்த கவிதை சிறப்பு. விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாக.... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையா, கதையா தெரியவில்லை
      ஆனால் வலிக்கிறது...

      நீக்கு
  4. எழுதியோ.. வாசித்தோ... வரைந்தோ.. வரைபடங்களை படைத்தோ.. கடந்து செல்ல இயல்வதில்லை அத்தனை நிகழ்வுகளையும்... அவை நம்மை.. அசைத்துக் கொண்டே இருக்கின்றன..

    பதிலளிநீக்கு
  5. நடப்பு அப்படித்தான் இருக்கிறது.........

    பதிலளிநீக்கு
  6. கவிதை... வெகு அருமை. இந்த நிலை வேதனையான விடயம்தான். ;(

    உங்கள் படம்... எடிட் செய்திருக்கும் விதம் வெகு அருமை. கருத்தாளம் காட்டி... அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்பின் வருகைக்கு நன்றிகள் பல...!!!
      எடிட் செய்தாலும் இனி வரும் காலத்தை உணர வைக்கிறது...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!